Friday, February 25, 2011

"இனி" என்னும் அழகி


ஒரு மாலை இள வெய்யில் நேரம். வாசல் மணி மண்டையை உடைக்கும் அளவிற்கு ஒலிக்க, கதவை திறந்தால் என் சீமந்த புத்திரி கையில் ஒரு அட்டை பெட்டியுடன் நின்றிருந்தாள். கீங் கீங் என்று சத்தம் உள்ளே குட்டியூண்டு நாய் குட்டிகள் மூன்று இருந்தன. ஐயோ என்ன அழகு என்று ஆவலுடன் பார்க்க, உள்ளிருக்கும் தாய் விழித்துக் கொண்டு, “என்னடி இது?” என்றுக் கோபமாய் கேட்டே(ன்) ள்.

"பாவம்மா, மொத்தம் ஆறு குட்டிகள். ரெண்டு கார்ல அடிப்பட்டு செத்துடுச்சு. ஒன்னை நேத்து ஒருத்தர் அடாப்ட் பண்ணிட்டாரு. நீ பயப்படாதே! ப்ளூ கிராஸ்ல சொல்லியிருக்கேன். இன்னும் என்னோட பிரண்ட்ஸ் எல்லார் கிட்டையும் சொல்லியிருக்கேன். அது வரை இதுங்க இங்க இருக்காட்டும்” என்றுச் சொல்லிக் கொண்டே, பால்கனி பக்கம் போனாள்.

மூன்றும் ஒன்றை ஒன்று அடித்துக் கொண்டும், பிறகு அழகாய் கட்டிக் கொண்டு தூங்கிக் கொண்டு இருந்தன. அழகு எல்லாம் கொஞ்ச நேரம் தான். மூன்றும் கழிவுகளால் பால்கனியை நாற அடித்துக் கொண்டு இருந்தன. வீடு முழுக்க அங்கங்கு நனைத்து வைக்க, என்னால் சமாளிக்கவே முடியவில்லை.

அதற்குள் அடுக்குமாடி குடியிருப்பில் பிராணிகளை வளர்க்க கூடாது என்று சொல்லப்பட, மூன்றும் பழையப்படி தெருவில், அதன் தாயிடம் விடப்பட்டன். ஆனால் ஓரே வாரத்தில் இரண்டு ஆண் குட்டிகள சுவீகாரம் போய்விட, பாவப்பட்ட பெண் ஜென்மம் அனாதையாய் தவிக்கிறேன் என்றுச் சொல்லிக் கொண்டு ”இனி” எங்கள் வீட்டில் நுழைந்தது.

நாளொருமேனியும் பொழுதுதொரு வண்ணமுமாய் எங்கள் செல்லக்குட்டியாய் ஆனது. மாதாமாதம் தடுப்பூசி என்ன, வகை வகையாய் விளையாட்டு சாமான், பால், செரிலாக்ஸ் என்று ஓரே அமர்களம்.

இதன் லூட்டி மீண்டும் அடுக்குமாடி குடியிருப்போர் சங்கத்தில் விவாதிக்கப்பட்டு, எங்களுக்கு நோட்டீஸ் தரப்பட்டது.

தனி வீடு கட்டிக் கொண்டு இருப்பதால் "இனி" யை அங்குக் கொண்டுப் போய் விட்டு விட்டோம். மே மாதத்திற்குள் வீடு தயாராகிவிடும், அதுவும அங்கு சமர்த்தாய் இருக்கிறது. அங்கு வேலை செய்யும் பதினெட்டு இருபது வயதில் இரண்டு பையன்கள் அதை நன்றாக பார்த்துக் கொள்கிறார்கள். வாரா வாரம் சனி, ஞாயிறு இங்கு வந்து விடுகிறது. நானும் அவ்வப் பொழுது அங்குப் போவதால் ஒரு பிரச்சனையும் இல்லை.

"இனி" என்று குரல் கொடுத்தால் போதும். அப்படியே தாவி வந்து நக்கி, கடித்து மேலே விழுந்து ஓரே புரளல்தான். என்னமோ அதன் மொழியில் கீ கூ என்று எனனை விட்டு விட்டு போய் போய் விட்டாய் இல்லையா என்றும் புலம்பல்.

பயங்கர வால், தெருவில் பெரிய பெரிய நாய் போனாலும் எலி மாதிரி இருந்துக் கொண்டு அவைகளைப் பார்த்து குலைக்க வேண்டியது. அவைகளை துரத்த வேண்டியது என்று ஓரே லூட்டி.

இப்பொழுது எல்லாம் வெள்ளி மாலை எப்பொழுது வரும் என்று நாங்கள் காத்துக் கொண்டு இருக்கிறோம் :-)

Labels:

9 பின்னூட்டங்கள்:

At Friday, 25 February, 2011, சொல்வது...

சில விஷயங்களால் வாழ்க்கை சுவாரஸ்யமாகிவிடுகிறது

 
At Friday, 25 February, 2011, சொல்வது...

ஆமாம் திரு.வேலு. பெற்ற பிள்ளை மாதிரி ஆகிவிடுகிறது. வாயில் கவ்வி, மேஜை டிராயரை
திறக்கிறது. கீழே படுக்கப் போட்டால், கொஞ்ச நேரத்தில் பெட்டில் ஏறி அருகில் படுத்துவிடுகிறது.
இந்த குறும்புகள் பார்க்க, பார்க்க சுவாரசியம்தான்.

 
At Friday, 25 February, 2011, சொல்வது...

எப்படி இவ்வ்ளோ நாள் இதை அனுபவிக்கவில்லை என்று தோன்றும்!

 
At Friday, 25 February, 2011, சொல்வது...

ஹையோ, அழகோ அழகு உஷா, எங்க மோதி கம்பீரமா இருப்பான். அவன் என்னை விட்டுப் பிரியவே மாட்டான். வெளியே போனால் வீட்டில் கத்தி லூட்டி பண்ணிடுவான். நான் இல்லைனா அவர் இருக்கணும். நான் எங்கேயாவது போனால் அவர் ஆபீஸுக்கு லீவு போட்டுட்டுப் பார்த்துப்பார்! :))))) அவனுக்காகவே எங்க பொண்ணு கல்யாணத்தை அம்பத்தூரிலேயே வைச்சுண்டோம். நடு நடுவிலே வந்து பார்த்துக்க செளகரியமா இருக்குமேனு. திடீர்னு 98 டிசம்பர் பதினாறாம் தேதி அதிகாலை போயிட்டான். அப்புறமா இன்னொருத்தரைக் கொண்டு வர இஷ்டமில்லை. :((((((((

இனி, இனியாவாக நல்லா இருக்கட்டும். வாழ்க்கையே புது அர்த்தங்களோடு இருக்கும். வாழ்த்துகள்.

 
At Friday, 25 February, 2011, சொல்வது...

வாழ்த்துக்கள்.

>>பயங்கர வால், தெருவில் பெரிய பெரிய நாய் போனாலும் எலி மாதிரி இருந்துக் கொண்டு அவைகளைப் பார்த்து குலைக்க வேண்டியது. அவைகளை துரத்த வேண்டியது என்று ஓரே லூட்டி.

- இப்பவே தமிழ் பிளாக்-லே எழுதப் பழகிக்கிறது போல இருக்கு :)

 
At Saturday, 26 February, 2011, சொல்வது...

ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு உஷா.

அழகா இருக்காள். ஒரு ஆறேழு மாசம் ஆனதும் வெட் கிட்டே கொண்டுபோய் fix செஞ்சுருங்க.

இந்தச் செல்லங்களின் அன்பு வாழ்நாள் முழுசும் மறக்கமுடியாதது என்பதுதான் சத்தியம்.

 
At Thursday, 10 March, 2011, சொல்வது...

உங்கள் கட்டுரையும் படித்தேன் உஷா நான்றாயிருந்தது.

http://eelavani.blogspot.com/2011/03/blog-post.html

 
At Saturday, 22 June, 2013, சொல்வது...

I read ur story. . It is nice...

 
At Saturday, 22 June, 2013, சொல்வது...

I read ur story. . It is nice...

 

Post a Comment

<< இல்லம்